மனதால் முதிர்ச்சியடையுங்கள்
* மனிதனாகப் பிறப்பது அரிது. மனிதனாக வாழ்வது அரிது.
உயர்ந்த அறநெறிகளைக் கேட்பது அரிது.
* உண்மையே பேச வேண்டும். கோபத்தை தவிர்க்க வேண்டும்.
கைவசம் இருப்பது கொஞ்சமே ஆனாலும் இருப்பவர்களுக்கு ஈதல்
வேண்டும். இவ்மூன்று செயல்களும் ஒருவனைத் தேவர்களிடம்
அழைத்துச் செல்கின்றன.
* தலைமயிர் நரைத்து விட்டதனால் மட்டும் ஒருவர்
முதிர்ச்சியடைந்த பெரியவர் ஆக இயலாது. அவ்வாறு அவர் அடைந்த
முதிர்ச்சி பயனற்ற முதுமையாகும். மனதால் முதிர்ச்சியடைய
வேண்டும்.
* புத்தரையும் தருமத்தையும் சங்கத்தையும் சரண்
அடைந்தவன் மேன்மையான நான்கு வாய்மைகளைத் தனது தெளிந்த
அறிவால் காண்கிறான்.
துன்ப நீக்கத்திற்கான வழி, ஆசைகளை விட்டு விடுவதால்
மட்டும் ஏற்பட்டுவிடாது. சொல், செயல், சிந்தனை
இம்மூன்றிலும் உண்மை இருக்க வேண்டும். நேர்மை இருக்க
வேண்டும். கொல்லாமை, அன்புடைமை, தூய அறிவுடைமை ஆகிய இந்த
உயர்ந்த இயல்புகளையும் நிலையாகக் கொள்ள வேண்டும்.
* முற்றிலும் நிந்திக்கப்பட்டவனும், முற்றிலும்
புகழப்பட்டவனும் ஒருக்காலும் இருந்ததில்லை. இருக்கப்
போவதுமில்லை. இப்போதும் இல்லை.
* குழம்பின் சுவையினை அகப்பை அறிய முடியாதது போல, தமது
வாழ்நாள் முழுவதும் அறிஞர்களோடு பழகினாலும், ஒரு மூடன்
அறத்தின் இயல்புகளை அறிய மாட்டான்.
* மலத்தைத் தின்று உடலைப் பெரிதாக்கிக் கொள்ளும்
பன்றியைப் போல, கொழுக்கப் பெரும் தீனி தின்ற சோம்பலிலும்,
தூக்கத்திலும் ஆழ்ந்து படுக்கையில் புரண்டு கொண்டு
இருப்பவன் முட்டாள். இவன் மீண்டும் மீண்டும்
பிறக்கிறான்.