அழகு குறிப்பு
உதடுகள் அழகாக சிவப்பு நிறமாக வேண்டுமானால், கிளிசரின் மற்றும் எலுமிச்சம் பழச்சாறை சம அளவு சேர்த்து தூங்கப் போகும்போது உதடுகளில் தேயுங்கள். காலையில் எழுந்ததும் கழுவி விடுங்கள்.
– கடுக்காய், செம்பருத்திப்பூ, நெல்லிக்காய் ஆகியவைகளை சம அளவு எடுத்து தேங்காய் எண்ணெயில் காய்ச்சி கூந்தலில் தடவினால் முடி நன்றாக வளரும்.
– முகத்தில் ரத்த ஓட்டம் அதிகமாகி பளிச்சென்ற வசீகரம் கிடைக்க வேண்டுமானால், ஒரு தேக்கரண்டி தேன், ஒரு தேக்கரண்டி துளசிச்சாறு கலந்து தினமும் வெறும் வயிற்றில் குடியுங்கள். மூன்று மாதம் இதை தொடர்ந்து சாப்பிட்டு வர வேண்டும்.
– பல்லில் இருக்கும் மஞ்சள் நிறத்தைப் போக்க எலுமிச்சம் பழச்சாறும் உப்பும் கலந்து பற்களை தேயுங்கள்.
-கஸ்தூரி மஞ்சளையும் சந்தனத்தையும் அரைத்து உடலில் பூசுங்கள். அரை மணி நேரம் கழித்து ஒரு மேஜைக்கரண்டி எலுமிச்சம் பழச்சாறு கலந்த நீரில் குளியுங்கள். இவ்வாறு செய்தால் தோலுக்கு நல்ல நிறமும் தோற்றமும் கிடைக்கும்.
– கற்க்ண்டு, தேன், கரட் சாறு, வெள்ளிக்காய்ச்சாறு ஆகியவைகளை சம அளவு சேர்த்து சாப்பிட்டால் முக அழகு அதிகமாகும்.
– தினமும் தூங்கச் செல்லும் முன்பு ஆமணக்கு எண்ணெயை இமையில் தேய்த்தால் இமை நன்றாக வளரும்.
– முகத்தில் பால் ஆடையை தேய்த்து அது காயும்போது லேசான சுடு நீரில் முகத்தை கழுவினால் முக அழகு பொலிவு பெறும்.
– தினமும் கரட் சாப்பிடவது தோல் அழகுக்கு நல்லது.
விக்கல் ஏன் ஏற்படுகிறது?
நமது வயிற்றையும், மார்புப் பகுதியையும், `டயபரம்’ என்ற ஒரு பகுதி பிரிக்கிறது. சிலநேரங்களில், அதன் தசைநார்கள் திடீரென்றும், தன்னிச்சையாகவும் சுருங்கி விரிந்து செயல்படுகின்றன. அப்போது ஏற்படுவதுதான் விக்கல்.
தன்னிச்சையாக என்றால்…?
உங்கள் விரும்பமோ, தேவையோ இல்லாமல் உங்கள் கட்டுப்பாட்டையும் மீறி தானாகவே நடக்கும் செயல்பாடுதான் அது. அதாவது, அனிச்சைசெயல் போன்றது.
உதாரணத்திற்கு ஒரு சம்பவம் :
நீங்கள் நடந்து சென்று கொண்டிருக்கிறீர்கள். கீழே தரையில் பெரிய கற்கள் கிடக்கின்றன. அவற்றை நம் கண்கள் பார்க்கின்றன. அடுத்த சில மைக்ரோ செகண்ட் நொடிகளிலேயே நம் முளையின் ஹைப்போதலாமஸ் பகுதியில் இருந்து ஒரு உத்தரவு பிறப்பிக்கப்படுகிறது.
அங்கே பெரிய, பெரிய கற்கள் கிடக்கின்றன. அதனால், அந்த கற்களை தாண்டிச் செல்ல வேண்டும். இல்லையென்றால், விலகிச் செல்ல வேண்டும் என்பதுதான் அந்த உத்தரவு. அந்த உத்தரவை மீறிச் சென்றால், காலில் ரத்தக்காயம் வாங்குவது நிச்சயம்.
ஆனால், அனிச்சைசெயல் என்பது அப்படி கிடையாது. சில அவசரமான நேரங்களில் முளையின் ஹைப்போதலாமஸ் உத்தரவு பிறப்பிப்பதற்கு முன்பாகவே சில நடவடிக்கைகளை நாம் மேற்கொள்கிறோம்.
உதாரணம் : வேட்டி கட்டிய ஒருவர் ஒரு வெட்ட வெளியில் நடந்து சென்று கொண்டிருக்கிறார். திடீரென்று காற்று வேகமாக வீசுகிறது. அவரையும் அறியாமல் அவரது கை அவர் அணிந்திருக்கும் வேட்டியை பிடிக்கச் செல்கிறது. இந்த சம்பவத்தில், ஹைப்போதலாமசில் இருந்து உத்தரவு வருவதற்கு முன்பே கையானது நடவடிக்கையில் ஈடுபட்டு விடுகிறது.
பெண்களில் பலர், தங்களது மாராப்பை அடிக்கடி சரி செய்து கொண்டிருப்பார்கள். அது, ஏற்கனவே சரியாகத்தான் இருக்கும். இருந்தாலும், சரி செய்வார்கள். இதுவும் அனிச்சைசெயல்தான்.
சரி… இனி விஷயத்துக்கு வருவோம்…
விக்கல் நமது உடலுக்கு தேவையான – பயனுள்ள ஒன்றுதானா என்றால், `இல்லை’ என்பதுதான் பதில். பெரும்பாலான விக்கல்கள் காரணம் இல்லாமலேயே தோன்றுகின்றன. அவ்வாறே தாமாகவே விரைவில் நின்றுவிடுகின்றன. ஓரிரு நிமிடங்களுக்கு மேல் அது நீடிப்பது மிகக் குறைவே.
அவ்வாறு விக்கல் ஏற்படும்போது, பொதுவாக ஒருவர் நிமிடத்திற்கு நான்கு முதல் 60 தடவைகள் விக்கக் கூடும். குறைந்தளவு நேரம் மட்டும் நீடிக்கும் அத்தகைய விக்கல்களுக்கு எவ்வித மருத்துவ சிகிச்சையும் தேவையில்லை.
ஆனால், சிலருக்கு சில நாட்கள்வரை இந்த விக்கல் விட்டுவிட்டு தொடரலாம். இதற்கு காரணம் ஏதாவது நிச்சயம் இருக்கும். அப்படிப்பட்ட நேரங்களில் உடனடியாக மருத்துவரை அணுகுவதுதான் நல்லது.
ஆறாத புண்களுக்கு செவ்வரளி -மூலிகை கட்டுரை
நம் உள் உறுப்புகளை பலவித நுண்கிருமிகளிலிருந்தும், ஆபத்தை ஏற்படுத்தும் ஆயுதங்களிடமிருந்தும், சீதோஷ்ண மாற்றங்களிலிருந்தும் காக்கும் தோலின் உணர் நரம்புகள் செயல்படாமல் போனால் ஆறாத அழுகும் புண்கள் உடல் முழுவதும் தோன்றிவிடும்.
நமது உடலின் புற அந்தங்களான கை மற்றும் கால் விரல்களில் உணர் நரம்புகள் ஏராளமாக கூடியுள்ளன. சில காரணங்களால் தோலுக்கு அடியில் சூழ்ந்துள்ள உணர் நரம்புக்கூட்டம் பாதிக்கப்படும் போது சிறப்புத்தன்மை வாய்ந்த இந்த உணர் நரம்புகள் பாதிப்படைந்துவிடுகின்றன. அதனை தொடர்நது தொடு உணர்ச்சி குறைய ஆரம்பித்து, அவ்விடங்களில் ஒருவித மரத்துப்போன் உணர்ச்சி தோன்றி, ஆறாத புண்களாக மாற ஆரம்பிக்கின்றன.
சர்க்கரை நோயில் தோன்றும் உணர்வின்மை காரணமாக விரல்களில் புண்கள், தொழுநோயில் தோன்றும் உணர்வின்மை காரணமாக விரல்களில் புண்கள், நரம்புகள், ரத்தக்குழாய்களில் தோன்றும் கிருமித்தொற்று, அடைப்பு காரணமாக விரல்களில் புண்கள் மற்றும் உணர்வற்று படுத்தே கிடப்பதினால் உண்டாகும் படுக்கைப்புண்கள் ஆகியன உண்டாகலாம்.
மேற்கண்ட நோய்களுக்காக சிகிச்சை பெற்று கட்டுப்பாடுடன் இருந்து வரும் போதிலும், சில நேரங்களில் புண்கள் உண்டாகி, அவை ஆறுவதற்கு பல ஆண்டுகள் ஆவது மட்டுமின்றி, அந்தப் புண்களில் நீர் வடிதல், சீழ் வடிதல் மற்றும் துர்நாற்றம் வீசுதல் ஆகிய துன்பங்கள் ஏற்பட்டு, பிறர் அருகில் வருவதற்கே அருவெறுப்பு அடையும் சூழ்நிலை உண்டாகும். பலவகையான கிருமிகள் இந்த புண்களின் வழியாக உடலின் உள்ளே சென்று, பலவித நோய் களை ஏற்படுத்தும் வாய்ப்புண்டு என்பதால், நோயின் ஆரம்பக் கட்டத்திலேயே இந்தப் புண்களை குணப்படுத்திவிட வேண்டியது அவசியம்.
உணர்வற்ற நிலையில் தோன்றும் விரல் புண்கள், படுக்கை புண்கள் ஆகியவற்றை நீக்கி, அழுகலை அகற்றி, புண் களை எளிதில் ஆறச்செய்யும் அற்புத மூலிகை செவ்வரளி. வீடுகளில் அழகுக்காக வளர்க்கும் தடிமனான இலைகளையும், சிவப்பு நிறப் பூக்களையும் உடைய இந்தச் செடிகள் நஞ்சுத்தன்மை உடையதால் தற்கொலை முயற்சிக்காக கிராமப்புற மக்களால் தவறாக பயன்படுத்தப்பட்டு வருகிறது.
நீரியம் ஓலியாண்டர் என்ற தாவரவியல் பெயர் கொண்ட அப்போசினேசியே குடும்பத்தைச் சார்ந்த செவ்வரளிச் செடியின் வேர், பட்டைகளிலுள்ள அலனின், ஆர்ஜினின், அஸ்பார்திக் அமிலம், சிஸ்டின், குளோட்டமின் அமிலம், டிரிப்டோபேன், டைரோசின் ஆகியன எதிர் நுண்ணுயிரிகளாக செயல்பட்டு, அழுகிய புண்களை ஆறச் செய்கின்றன.
அரளிப் பட்டையை 35 கிராமளவு எடுத்து, ஒன்றிரண்டாக தட்டி, அரளிப்பட்டை கசாயத்தால் அரைத்து, ஒரே உருண்டையாக உருட்டி 250 மி.லி., நல்லெண்ணெயில் போட்டு காய்ச்சி, பதத்தில் வடிகட்டி வைத்துக் கொள்ள வேண்டும். இதனை அழுகிய புண்கள் உள்ள இடங்களில் தடவி, பருத்தி துணியால் கட்டி வர விரைவில் ஆறும். படுக்கைப்புண்களில் இந்த தைலத்தை தடவி வரலாம். இது நஞ்சுத்தன்மை உடையதாகையால் உள்ளே சாப்பிடக்கூடாது.
– டாக்டர் ஜெ.ஜெயவெங்கடேஷ், மதுரை.
மூளையை கொல்லாதீங்க, ப்ளீஸ்!
100,000,000,000 எவ்வளவு என்று கணக்கிட்டு விட்டீர்களா? ஆம், பத்தாயிரம் கோடி; இவ்வளவு செல்கள் நம் ஒவ்வொருவரின் மூளையிலும் உள்ளன. வியப் பின் உச்சிக்கே சென்று விட்டீர்களா? இவ்வளவு செல்களையும் நாம் பயன்படுத்த முடியாவிட்டாலும், செல்களை கொல்லும் வேலையை மட்டும் செய்கிறோம். சரியாக சாப்பிடாமல், சரியாக தூங்காமல், உடலை சரியாக வைத்துக் கொள்ளாமல். இதனால் தான் சோர்வு முதல், பல பிரச்னைகளும் ஏற்படுகின்றன. ஒருவர் கோமா நிலைக்கு செல்வதற்கும் இது தான் காரணம்.
கொல்லாதீங்க
ஆம், உங்கள் மூளையில் உள்ள செல்களை கொல்லாதீர்கள்; என்னது, நமக்கு நாமே மூளை செல்களை கொல்ல முடியுமா என்று கேட்கலாம். அது தான் இப்போது இளைய தலை முறையினரிடம் காணப்படுகிறது.
எந்த ஒரு வேலையில், தொழிலில் இருக்கும் சிலர் மட்டும் தான் “பேலன்ஸ்’ ஆக இருப்பர்; அவர்கள் சுறுசுறுப்பு குறையாது. ஆனால், சிலரைப் பார்த்தால், “டென்ஷன்…’ என்றே சொல் லிக் கொண்டிருப்பர். சரியாக தூங்கமாட்டார்கள்; சாப்பிடமாட்டார்கள்; இவர்கள் தான் அதிகபட்சம் மூளை செல்களை “கொல்’கின்றனர். அதாவது, செல்கள் செயலிழந்துபோகின்றன.
தூக்கம் நிச்சயம்
மூளை செல்கள் குறையாமல் இருக்க, முதலில் கைகொடுப்பது சீரான தூக்கம் தான். 8 மணி நேர தூக்கம் தேவை என்று சொன்னாலும், சிலருக்கு 7, 6 மணி நேரம் தான் தூக்கம் வருகிறது. இது தவறல்ல என்கின்றனர் டாக்டர்கள். ஆனால், தூக்கத்தை மட்டும் தியாகம் செய்யக்கூடாது; தினமும் சரியான நேரத்தில் தூங்கச் செல்ல வேண்டும்.
மன அழுத்தம் “நோ’
தூக்கம் வராமல் இருக்க காரணம், பலருக்கும் உள்ள “டென்ஷன்’ தான். மன அழுத்தம் பல வகையில் இவர் களை பாதிக்கிறது. மனதில் எதையும் போட்டுக்கொண்டு, தேவையில்லாமல் மண்டையை குழப்பிக் கொள்வதால் மனஅழுத்தம் அதிகமாகிறது.”டென்ஷன்’ பேர்வழிகளுக்கு, கார்டிசோல் சுரப்பி அதிகமாக சுரந்து, மூளை செல்களை குறைக்கும் வேலையை செய்கிறது. அதனால், “டென்ஷன்’ என்று இனி சொல்லாதீர்கள்; மனதை சமப்படுத்துங்க.
தண்ணியே போ… போ
மது அருந்துவதால் பல பிரச்னைகள், ஐம்பதை தாண்டும் போது தான் தெரியும். சிலர் கண்முன் தெரியாமல் கண்டபடி குடிப்பதும், பல பிராண்டுகளை சுவைப்பதும் உண்டு. இவர்களுக்கு பின்னால், பெரும் ஆபத்து உள்ளது என்பதை அறிவதே இல்லை. ஆல்கஹால் செய்யும் கெடுதல் போல, வேறு எதுவும் உடலுக்கு செய்வதில்லை. மூளை செல்களை பாதிக்கச் செய்வதில் இதற்கு அதிக பங்குண்டு என்கின்றனர் டாக்டர்கள்.
“எக்சோடாக்சின்’
பதப்படுத்தப்பட்ட, பாக்கெட்களில் அடைக்கப்பட்ட கொழுப்பு சத்துள்ள “ஜங்க் புட்’ வகை உணவுகளில் “எக்சோடாக்சின்’ என்ற ரசாயன சத்து உள்ளது. இப்போதுள்ள இளைய தலைமுறையினருக்கு “ஜங்க் புட்’ தான் பிடித்தமானது. எப்போதுமே இந்த உணவுகளை சாப்பிட்டு வந்தால், இந்த ரசாயன பாதிப்பு அதிகமாக இருக்கும். விளைவு, மூளை செல்கள் அதிகமாக குறைவதே.
“சீப்’பான அயிட்டங்கள்
அவசரத்துக்கு ஏதோ சாப்பிடுவது, சமோசா, சிப்ஸ் போன்ற மொறு, மொறுக்களை சுவைப்பது என்பதை பழக்கப்படுத்திக்கொள்வது, வயதாகும் போது பெரிய பாதிப்பை ஏற்படுத்தும் என்பது, இளைய தலைமுறையினருக்கு தெரிவதில்லை. சுகாதாரமானது அல்ல என்று தெரிந்தால், கண்டிப்பாக அதை தவிர்ப்பது நல்லது; ருசிக்கு சாப்பிடும் போது, சுகாதாரமானதா என்பதையும் அறிவது முக்கியம்.
குடிங்க கண்டிப்பாக
ஆமாங்க, தண்ணீர் குடிங்க; ஒரு நாளைக்கு இரண்டு லிட்டர் தண்ணீராவது, குடிநீராகவும், திரவமாகவும் உடலுக்கு போக வேண்டும். அப்போது தான் மூளைக்கு நல்லது.
உடலின் ஒட்டுமொத்த நிர்வாகத்துக்கு காரணம் மூளை தான்; மூளை செல்கள் தான், உடலில் ஒவ்வொரு இயக்கத்தையும் கட்டுப்படுத்துகிறது. அதனால், தண்ணீர் குடிக்க மட்டும் மறக்கக்கூடாது.
தரை சுத்தமாக…
இப்போதெல்லாம், வீட்டை சுத்தமாக்கவே, பல வகை ரசாயன பாட்டில்கள் வந்துவிட்டன. எதற்கெடுத்தாலும் இந்த ரசாயன கலவையை “ஸ்ப்ரே’ செய்து விடும் போக்கு அதிகரித்து விட்டது. ஒரு பக்கம், கிருமிகள் பூச்சிகள் வராமல் தடுக்கிறது என்றாலும், அதை சுவாசிப்பதால், நம் மூளை செல்கள் குறைய வாய்ப்பு அதிகம்.
இது போலத்தான் பெயின்ட் போன்ற ரசாயன கலவைகளை நுகர்வதும் கெடுதல் தான். முடிந்தவரை பாதுகாப்பாக பயன்படுத்த வேண்டும்.
காய்கறி, பழங்கள்
இந்த மூளை செல்கள் பாதிப்பை தவிர்க்க, சிம்பிள் வழி இதோ; எதுவும் செய்ய வேண்டாம்; டாக்டரிடம் போக வேண்டாம்; பச்சைக் காய்கறிகளை உணவில் சேர்த்துக் கொள்ளுங்கள்; பழங்களை சாப்பிடுங்கள். போதும்.
பி 12, பி 6 போன்ற வைட்டமின் சத்துகள் கிடைப்பது, பச்சைக் காய்கறிகளிலும், பழங்களிலும் தான். இதை மறந்து விடாதீர்கள்.
முப்பரிமாண ‘டிவி’க்கு மாறும் அமெரிக்கர்கள்
அமெரிக்காவில் 3டி “டிவி’யை வாங்க மக்கள் அதிக ஆர்வம் காட்டி வருகின்றனர். பெட்டி வடிவில் இருந்த “டிவி’க்கள், தற்போது தகடு வடிவில் தயாரிக்கப்பட்டு வருகின்றன.
பழைய “டிவி’க்களை மாற்றி விட்டு எல்.சி.டி., “டிவி’க்களை வாங்கி வரும் வேளையில், அமெரிக்காவில் தற்போது முப்பரிமாண(3டி)”டிவி’க்கள் விற்பனைக்கு வந்துள்ளன.இவை எல்.சி.டி., “டிவி’க்களை விட இரண்டு மடங்கு விலை அதிகம். அதுமட்டுமல்லாது, இந்த “டிவி’யை அதற் கென தயாரிக்கப்பட்ட மூக்கு கண்ணாடி அணிந்து தான் பார்க்க வேண்டும்.”டிவி’யில் வரும் காட்சிகளை கண்ணுக்கு அருகாமையில் காட்டும் இந்த முப்பரிமாண “டிவி’க்கு அமெரிக்காவில் மவுசு அதிகரித்துள்ளது.எனவே, எல்.சி.டி., “டிவி’க்களை அமெரிக்க மக்கள் தற்போது ஓரம் கட்ட துவங்கி விட்டனர்.
முப்பரிமாண “டிவி’யில் “அவதார்’ போன்ற சமீபத்தில் வெளிவந்த 3டி படங்கள் திரையிடுவதற்காகவே தனி சேனலும் துவக்க முயற்சிகள் நடந்து வருகின்றன. ஈ.எஸ்.பி.என்., சோனி, ஐமேக்ஸ், டிஸ்கவரி போன்ற சேனல்கள் ஒன்றிணைந்து 3டி படங்களை ஒளிபரப்புவதற்கான கட்டமைப்பை வரும் ஜூன் மாதம் உருவாக்க ஒப்பந்தம் மேற்கொண்டுள் ளன.இதைத் தொடர்ந்து, உலக கோப்பை கால்பந்தாட்ட போட்டியை இந்த 3டி சேனலில் ஒளிபரப்ப ஈ.எஸ்.பி.என்., முடிவு செய்துள்ளது. அடுத்த ஆண்டு முதல் 3டி படங்களை ஒளிபரப்ப சோனி திட்டமிட்டுள்ளது.
பருத்த தொடை, இடை, பிட்டம் உடல் ஆரோக்கியத்துக்கு நல்லது
தடித்த பின்னழகும், இடையும், தொடையும் கொண்டவரா நீங்கள்? மற்றவர்கள் கிண்டல் செய்கிறார்களா? பருமனை மறைக்க, படாதபாடு படுகிறீர் களா? கவலையை விடுங்கள்! உலகிலேயே ஆரோக்கியமானவர், நீங்கள் தான்! ஆம்… லண்டன் ஆராய்ச்சியாளர்கள் இந்த பேருண்மையை கண்டுபிடித்துள்ளனர்.
லண்டனில் உள்ள ஆக்ஸ் போர்டு பல்கலைக் கழக உடல் கூறு இயல் அறிஞர்கள், அளவுக்கு அதிகமாக வளர்ச்சியடைந்த பிட்டம், இடை, தொடை கொண்டவர்களை வைத்து ஆராய்ச்சியில் ஈடுபட் டனர். இதய நோய், உடலின் வளர்சிதை மாற்றம் ஆகியவற்றுக்கும், உடல் பருமனுக்கும் என்ன தொடர்பு உள்ளது என்று ஆராய்ச்சி செய்ததில், மேற் குறிப்பிட்ட மூன்று உடல் பாகங் களிலும் கொழுப்பு சேர்வது, இதயத்துக்கு நல்லது என்று தெரிய வந்தது. “இடைப் பகுதியில் சேரும் கொழுப்பு, கெட்ட கொழுப்பு அமிலங்களை அப்புறப்படுத்துகிறது; வீக்க எதிர்ப்புச் சக்தியை உருவாக்கி, ரத்த நாளங்களில் அடைப்பு ஏற்படாமல் பாதுகாக்கிறது.
பிட்டத்தில் சேரும் கொழுப்பும் இதே பயனைத் தருகிறது. ஆனால், வயிற்றுப் பகுதியில் மட்டும், கொழுப்பு சேரக் கூடாது’ என்று கூறும் இந்த அறிஞர்கள், “உண்மையைச் சொல்வதெனில், இடைப் பகுதியில் மிகக் குறைந்த அளவு கொழுப்பு சேர்வது, வளர்சிதை மாற்றத்தில் பெரிய பாதிப்பை உருவாக்கி விடுகிறது. தொடையிலும், பின்புறத் திலும் சேரும் கொழுப்பு, கடினமாக இருப்பதால், உடலின் வேறு பகுதிகளுக்குச் செல்வதில்லை’ என்கின்றனர். “கொழுப்பு கரையாமல் ஒரே இடத்தில் இருப்பது நல்லது. ஏனெனில், கொழுப்பு கரையும் போது, “சைடோகைன் ‘என்ற ரசாயனம் சுரக்கிறது. இது, இதய நோய், நீரிழிவு ஆகியவற்றை உண்டாக்கி விடும். இந்த நோய்கள், உடலில் வீக்கத்தை அதிகரித்து விடும்’ என்றும் இவர்கள் கூறுகின்றனர்.
கான்ஸ்டன்டினோஸ் மானோலோபோலஸ் என்ற ஆராய்ச்சியாளர் கூறுவதாவது: கட்டுக்கோப்பான உடல் இருப்பது அவசியம் தான். ஆனால், உடலின் எந்த உறுப்பில் கொழுப்பு சேர்கிறது என்பதைக் கண்டறிவது, அதை விட அவசியம். வயிற்றுப் பகுதியில் சதை போடாமல், தொடையில், இடுப்பில், பிட்டத்தில் சதை போடுவது நல்லது தான். ஆனால், துரதிருஷ்டவசமாக, இந்த நான்கு உறுப்புகளுமே ஒன்றோடொன்று தொடர்புடையவை; இடுப்பில் கொழுப்பு சேர்ந்தால், வயிற்றிலும் சேர்ந்து விடும். எனவே, உடல் பருமனாக இருப்பவர்களுக்கு, இடுப்பு பகுதியில் சதை போடத் துவங்கி விட்டாலே, அவர்கள், உணவு முறையையும், வாழ்க்கை முறை யையும் அடியோடு மாற்றிக் கொள்ள வேண்டியது அவசியம். தொடர்ந்து உடற்பயிற்சி, உணவுக் கட்டுப்பாடு ஆகியவற்றை மேற் கொண்டால் மட்டுமே, இதய நோய் போன்ற ஆபத்துகளிலிருந்து தப்ப முடியும். இவ்வாறு கான்ஸ்டன்டினோஸ் கூறுகிறார்.
கடுகின் மருத்துவத் தன்மை
கடுகு சிறுத்தாலும் காரம் குறையாது என்பது பழமொழி. இத்தகைய சிறப்பு மிக்க கடுகிற்கு ஏராளமான மருத்துவ குணங்கள் உள்ளன.
பொதுவாக நாம் கடுகை சமையலில் தாளிப்பதற்கு பயன்படுத்துகிறோம். அதாவது, நாம் சமைக்கும் சமையல் ஜீரணமாக அடிப்படையான கடுகை முதலில் போடுகிறோம். ஏன் என்றால் கடுகு ஜீரணத்திற்கு உதவுகிறது.
தினமும் காலையில் வெறும் வயிற்றில் கடுகு, மிளகு, உப்பு மூன்றையும் ஒரே அளவு சேர்த்து சாப்பிட்டுவிட்டு அதன்பிறகு வெந்நீர் குடிக்க வேண்டும். இப்படி செய்வதால் பித்தம், கபம் போன்றற்றால் ஏற்படும் உடல் உபாதைகள் நீங்கும்.
விஷம், பூச்சி மருந்து, தூக்க மாத்திரை போன்றவற்றை சாப்பிட்டவர்களுக்கும், 2 கிராம் கடுகை நீர்விட்டு அரைத்து நீரில் கலக்கி உட்கொள்ளக் கொடுத்தால் உடனடியாக வாந்தி எடுத்து விஷம் வெளியேறும்.
தேனில் கடுகை அரைத்து உட்கொள்ளக் கொடுக்க இருமல், கபம், ஆஸ்துமா குணமாகும்.
கடுகை தூள் செய்து வெந்நீரில் ஊற வைத்து வடித்து கொடுக்க விக்கலை குணமாக்கும்.
கடுகை அரைத்து பற்றிட ரத்தக்கட்டு, மூட்டு வலி தணியும்.
கை, கால்கள் சில்லிட்டு விரைத்துக் காணப்பட்டால் கடுகை அரைத்து துணியில் தடவி கை, கால்களில் சுற்றி வைக்க வெப்பத்தை உண்டாக்கும். உடனடியாக விரைப்பு சீராகும்.
கடுகு, பூண்டு, வசம்பு, கருவாப்பட்டை, கழற்சிக்காய், கடுகு, ரோகிணி ஆகியவற்றை சம அளவு எடுத்து நீர்விட்டு காய்ச்சி வடிகட்டி இருவேளை வீதம் ஒரு வாரம் குடித்து வர வாதம், வாய்வு, குத்தல் பிரச்சினை குணமாகும்.
கடுகு, மஞ்சள் சம அளவு எடுத்து நல்லெண்ணெயில் காய்ச்சி வடிகட்டிக் காதில் சில சொட்டுகள் இட தலைவலிக்கு நிவாரணம் கிட்டும்.
நடராஜர் கோலத்தில் மாணிக்கவாசகர்!
பொருள் கூறவா? வாக்கியம் காட்டவா? புருவம் உயர்த்தி, கம்பீரமாகக் கேட்டார் அவர்.
அதிர்ந்த சிதம்பரம் பண்டிதர்கள், கேட்டு அறிவதைவிட பார்த்து உணரலாம் என்று எண்ணி பொருளைக் காட்டுக என்றனர். புன்னகைத்த அடியவர், இதோ! இவர்தான் திருவாசகத்தின் பொருள்! என பொன்னம்பலக் கூத்தனைக் காட்டியபடி, சந்நிதிக்குள் சென்றார். அப்படியே இறைவனுடன் இரண்டறக் கலந்தார்!
பெரும்பேறு பெற்ற இந்த அடியவர், மாணிக்கவாசகர். இவருக்கு சிவனாரே குருவாக இருந்து உபதேசித்த தலம் திருப்பெருந்துறை (ஆவுடையார் கோவில்). இங்கே மாணிக்கவாசகருக்கு சந்நிதி மட்டுமே உண்டு. ஆனால் தேனி அருகிலுள்ள சின்னமனூரில், கோயிலே இருக்கிறது!
எண்ணமும் வாழ்வும் சிவனைப் பறியே இருந்ததால் மாணிக்கவாசகரை அறிவாற் சிவமாகிய மாணிக்கவாசகர் என்பர். இந்தப் பெயரில் சின்னமனூர் கோயிலில் அருள்கிறார் மாணிக்கவாசகர். இவரது திருவாசகம், திருவெம்பாவையின் பெருமையை உலகுக்கு உணர்த்த அண்ணாமலைப்பிள்ளை என்பவரால் எழுதப்பட்ட ஆலயம் இது.
முல்லைப் பெரியாற்றின் கரையில் மூன்று நிலை ராஜகோபுரத்துடன் அமைந்திருக்கிறது ஆலயம். மாணிக்கவாசகரின் வாழ்க்கை மற்றும் திருவாசகத்தில் கூறப்பட்டுள்ள நிகழ்வுகளைச் சித்திரிக்கும் கோபுரச் சிற்பங்கள் மிக அழகு. கருவறையில்…. புன்னகையுடன் வலது கையில் ருத்ராட்ச மாலை, சின்முத்திரை காட்டி, இடதுகரத்தில், ஏட்டுச் சுவடியுடன் தரிசனம் தருகிறார் மாணிக்கவாசகர். குரு அம்சத்துடன் திகழும் இவர் தென்திசை நோக்கி அருள்பாலிக்கிறார். இங்கே மாணிக்கவாசகருக்கு இரண்டு உற்ஸவ விக்கிரகங்கள்.
ஸ்ரீநடராஜ பெருமானின் உற்ஸவர் விக்கிரகம் மிக அழகு. விரிசடையுடன் கூடிய சிரத்தில் கங்காதேவி திகழ, பிறைசூடிய பெருமானாக… வலது கையில் உடுக்கை, இடது கையில் அக்னி ஏந்தி, காற்சிலம்புடன் கம்பீரமாக தரிசனம் தருகிறார். திருவாதிரைத் திருநாளை ஒட்டி பத்து நாட்கள் நடைபெறும் விழாவில் அனுதினமும் காலையில் சிவகாமியம்மை சமேத நடராஜருக்கும் மாணிக்கவாசகருக்கும் விசேஷ அபிஷேக ஆராதனைகள் நடைபெறுகின்றன. ஆடல்வல்லானுக்கு நடைபெறும் பூஜையில் கலந்து கொள்வதால் இன்னல் நீங்கும்; இல்லறம் சிறக்கும்.
கோயில் தொடர்புக்கு: 04554 – 249480 / செல்: 99407 65298.